Friday, December 13, 2013

திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்கள் வழங்கியவர் அனுஸ்ரீ ராமமூர்த்தி



     


              திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்கள்

                                          வழங்கியவர் அனுஸ்ரீ ராமமூர்த்தி

     

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்
ககனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே.

பாடலின் பொருள்:
திருக்குற்றாலமலையில் உள்ள ஆண் குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்து மந்திகளுக்கு கொடுத்துக் கொஞ்சி மகிழும். அப்பழங்களைத் தின்றும் சிதைத்தும் பெண் குரங்குகள் விளையாடும். இவ்வாறு மந்தி சிந்திய பழங்களை வான் உலகில் வாழும் தேவர் கூட்டம் மிக வேண்டி விரும்பிக்கேட்கும்.
காடுகளில் வாழும் வேடர்கள் தங்கள் கண் பார்வையாலேயே உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள். வான் வழியாகச் செல்லும் சித்தர்கள் கீழிறங்கி இம்மலைக்கு வந்து உடலுக்கு நன்மை அளிக்கும் யோகங்கள் என்னும் சித்து வேலையைச் செய்வார்கள். இம்மலையிலுள்ள தேன்கலந்த மலை அருவியின் அலைகள் மேல் நோக்கி உயர்ந்து பாய்ந்து வானத்தில் இருந்து வழிந்து ஓடும். அதனால் செந்நிறச் சூரியனின் தேரில் பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும் தேர்ச்சக்கரமும்வழுக்கிவிழும்.
வளைந்த இளம் பிறையைச் சூடிய சடை முடியையும் உடையவர் திருக்குற்றாலநாதராகிய சிவபெருமான். அவர் எழுந்தருளியுள்ள சிறப்பு மிக்கது திருக்குற்றாலமலை. அம்மலையே எங்களுக்கு உரியது என்று குறத்தி மலைவளம் கூறுவதாக இப் பாடல் அமைந்துள்ளது.


முழங்கு திரைப் புனலருவி கழங்கென முத்தாடும்
முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக்கொண்டோடும்
கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்படி நடப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்

செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்
வழங்குகொடை மகராசர் குறும்பலவிலேசர்
வளம்பெருகுந்திரிகூட மலையெங்கள் மலையே!

 பாடலின் பொருள்:
முழங்கும் ஓசை கொண்ட அலைகளையுடைய நீர் வீழ்ச்சி, செல்லும் வேகத்தில் கழங்காடுகின்ற தென்னும்படி முத்துக்களை ஒதுக்கிச் செல்லும்; அந்த அருவி, மக்கள் வாழுகின்ற வீட்டின் முற்றங்களிலெல்லாம் பரவிச் சென்று சிறுமிகளின் மணல்வீடுகளை அழித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கும்; நாங்கள் மலைக்கிழங்குகளைத் தோண்டியும், தேன் இறால்களைப் பிய்த்து எடுத்தும், மலையின் செழிப்பைப் பாடிக்கொண்டே கூத்தாடுவோம்; பூண்கட்டிய யானைக்கொம்புகளை ஒடித்து உலக்கையாகக் கொண்டு வறுத்த தினைத் தானியத்தை இடிப்போம். இளமை பொருந்திய குரங்குகள் இனிமையுள்ள மாம் பழங்களையே பந்தாகக் கொண்டு அடித்து விளையாடும்; தேன் பெருகி ஓடுகின்ற செண்பகப் பூவின் மணம், தேவருலகினிடத்தே போய்ப் பரவும்; அருட்கொடை வழங்குகின்ற தேவாதி தேவராகிய குறும்பலா மரத்தினடியில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதருக்குரியதான எல்லா வளமும் பெருகியிருக்கின்ற திருக்குற்றாலமலையே எங்களுக்குரியதாக நாங்கள் வாழுகின்ற மலையாகும்

No comments:

Post a Comment