Friday, December 6, 2013

நிவேதா சுப்பிரமணியன் வழங்கிய விவேக சிந்தாமணி



                     விவேக சிந்தாமணி

வழங்கியவர்:  நிவேதா சுப்பிரமணியன்


ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் கும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே.

நிவேதா:
இங்கு விருந்து ஓம்பும் முறையினைக்கூறுகின்றார். கொடுப்பது கூழாக இருந்தாலும் ஏன்?...அது உப்புக்கூட இல்லாத கூழாயிருந்தாலும், முகமலர்ச்சி பொங்க உண்மையான அன்போடும் நல்ல மனதோடும் அக்கூழ் உனவை இட்டால் அதுவே அமுதம். அதற்குமாராக மூன்று வகையான பழங்களோடு, பாற்சோற்றை விருந்தாகப் படைத்தாலும் கடுகடுத்த முகத்தோடு விருப்பமின்றிக் கொடுப்பின் அது பசியை மேலும் அதிகரிக்கவே செய்யும். எனவே, விருந்தோம்பலில்
உணவுப்பொருளைவிட அதைப்பரிமாறுவோரின் மனமே முக்கியம்.


தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்து இடைஇருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே.

நிவேதா:
தவளையும் தாமரையும் ஒரே குளத்தில் பிறந்து வளர்ந்திருப்பினும் தவளையானது தன் அருகில் உள்ள தாமரையின் குளிர்ந்த தேனை உண்ண அறியாது. ஆனால் வெகு தொலைவில் காட்டினிடையே வாழும் வண்டோ, அத்தாமரயிடம் வந்து அதன் குளிர்ந்த தேனை உண்டு களிக்கும். அது போல முன்பே பழகியிருந்தாலும் நல்லோரின் அருமையை அறிவற்றவர் அறியமாட்டார். ஆனால் கற்றவரோ அந்த நல்லவரைக் கண்டு , கண்ட பொழுதே மகிழ்ந்து அவரிடத்தே நட்புக் கொண்டுஅந்நல்லோருடன் உறவு கொள்வர்.


No comments:

Post a Comment