Friday, April 17, 2015

வயிறு - என்ன செய்யும்?

ற்களால்கூட கூழாக்க முடியாத உணவை, இரைப்பை அரைத்துவிடும். இரைப்பையில் உணவு செரிக்க, மூன்று மணி நேரம் பிடிக்கும். சாப்பிடும்போது, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சுருங்கி விரியும் இரைப்பை, சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை சுருக்கி விரியும். இதனால், வயிற்றில் வலி, பசி மயக்கம், சோர்வு ஏற்படும். உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிக்கப்படும். நேரத்துக்குச் சாப்பிடுவது அவசியம்.
 
 பசிக்காமல்போனால், உண்ட உணவு சரியாகச் செரிமானம் ஆகவில்லை என்று அர்த்தம். அதிக உடல் எடை, இரவு உணவைத் தாமதமாகச் சாப்பிடுவது, செரிமானம் இன்மைக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. உணவுத் துணுக்குகள் உமிழ்நீருடன் சேர்ந்து, நன்கு ஜீரணமாக உதவுவதால், உணவை அப்படியே விழுங்காமல், நன்றாக மென்று சாப்பிட வேண்டும். கடின உணவைத் தவிர்த்து, மிருதுவான உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.     
 காரம் சாப்பிட்டால்தான் அல்சர் வரும் என்று, அந்தக் காலத்தில் சொல்லப்பட்டது. ஆனால் இன்றோ, எதற்கெடுத்தாலும் வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வதாலும் அல்சர் வருகிறது. மருத்துவரின் பரிந்துரை இன்றி, வலி மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. சிவப்பு மிளகாய் பயன்படுத்துவதை, முடிந்தவரை தவிர்க்கவும்.
 நார்ச்சத்து நிறைந்த கொய்யா, பப்பாளி, வாழை போன்ற பழங்களைத் தினமும் சாப்பிடுவதும், கீரை சேர்த்துக்கொள்வதும், போதுமான அளவு நீர் அருந்துவதும், மலச்சிக்கலில் இருந்து தப்பிக்க உதவும்.
 செரிமானம் இன்மை, பசி இன்மை, தலைவலி, அஜீரணக் கோளாறு போன்ற காரணங்களால் வயிற்று உப்புசம் ஏற்படலாம். மேலும், ஹைப்போதைராய்டு, அதிக அளவு கொழுப்பு, அளவுக்கு அதிகமான சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலும் வயிறு வீங்கலாம். வயிற்றில் இருப்பது காற்றா, நீரா என்பதை, அல்ட்ராசவுண்டு ஸ்கேன் செய்துபார்த்து, அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.
 அதிக அளவு கொழுப்பு, வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும்போது, தொப்பை விழுகிறது. இதனால், உடல்பருமன் அதிகரித்து, சர்க்கரை நோய், இதயநோய்க்கு வழிவகுக்கும். முறையான பயிற்சி, நார்ச்சத்து, அதிகம் கொழுப்பு இல்லாத உணவுகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், தொப்பை வருவதைத் தவிர்க்கலாம்.
 பெண்களுக்கு, குழந்தைப் பிறப்புக்குப் பிறகு, வயிற்றில் வரிகள் (Stretch marks) ஏற்படும். வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வந்ததும், தசைகள் சுருங்குவதால் இந்த வரிகள் ஏற்படுகின்றன.  வயிற்றுத் தசைகளை இறுக்கும் பயிற்சிகள், நார்ச்சத்து உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம், இந்த வரிகளைப் போக்கலாம்.
 உணவு அலர்ஜி ஏற்பட்டாலும் வாந்தி வரலாம். வாந்தி வருவதைத் தடுக்கும் மருந்துகள் இருக்கின்றன. வாந்தி வரும்போது, அதைத் தடுப்பதைவிட, எடுத்துவிடுவதே நல்லது. அதிக அமிலங்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
 பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுதான் வயிற்றுப்போக்கு. இதனால், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைக் கிரகிக்க முடியாமல் போகிறது. உடலுக்குத் தேவையான ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது. வயிற்றுப்போக்குக்கான காரணத்தை சரிசெய்வதுடன், சத்தான உணவு, சுத்தமான தண்ணீர், திரவ உணவுகள் எடுத்துக்கொள்வதன்
மூலம், இழந்த சத்தை மீட்கலாம்.
 வயிற்றில் அதிகக் காற்று சேருவதற்கு, வாய் வழியாகக் காற்றை விழுங்குவதுதான் காரணம். நிதானமாகச் சாப்பிடுவது, மெதுவாகத் தண்ணீர் குடிப்பது, மூன்று வேளைக்குப் பதில், ஐந்து வேளையாக உணவைப் பிரித்து உண்பது போன்ற பழக்கங்களால் இதனைத் தவிர்க்கலாம். பாட்டில் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். சாப்பிட்டதும் அரை கிலோமீட்டர் மெதுவாக நடப்பது நல்லது.

நன்றி- டாக்டர் விகடன்.

Friday, April 10, 2015

சூப்பர் ஸ்டாக்கர் 3சி’ ப்ரியங்காவின் கண்டுபிடிப்பு....

க்ளீன் இந்தியா’ திட்டத்துக்காக பள்ளி மாணவர்கள் பலரும் தெருக்களில் இறங்கி சுத்தம் செய்ததையே மகிழ்ச்சியோடு பார்த்த நமக்கு, பெருமகிழ்ச்சி தருகிறார்... பலகட்ட பாய்ச்சலாக, நவீன குப்பைத் தொட்டியை உருவாக்கியிருக்கும் பதினோராம் வகுப்பு மாணவி, பிரியங்கா மதிஷரா. இவர் சென்னை, சர்ச் பார்க் பள்ளி மாணவி.
‘‘வீட்டின் எதிரில், வீதியில் பேருக்கு ஒரு குப்பைத் தொட்டி இருக்கும். அது எப்போதும் நிரம்பி வழியும். குப்பை அள்ள வருகிறவர்களைப் பார்க்கவும் பாவமாக இருக்கும். எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், கழிவுகளைக் கைகளால் அவர்கள் சுத்தம் செய்வது, கொடுமை. மனதை அரித்துக்கொண்டிருந்த இந்தக் காட்சிகள்தான், நவீன குப்பைத் தொட்டியைக் கண்டுபிடிக்கத் தூண்டியது.  
 
இதன் பெயர் ‘சூப்பர் ஸ்டாக்கர் 3சி’. இப்போது தெருக்களில் நாறிக்கொண்டும், நிரம்பி வழிந்துகொண்டும் அருவருக்க வைக்கும் குப்பைத் தொட்டிகள் போல இது இருக்காது. காரணம், இதில் குப்பையைக் கொட்டியதும் அவற்றை க்ரஷ் செய்து கம்ப்ரஸ் செய்துவிடும். இதனால் நிறைய இடம் கிடைக்கும். அப்படியே குப்பைத் தொட்டி நிரம்பிவிட்டால், உடனடியாக மாநகராட்சிக்கு எஸ்.எம்.எஸ்.  அனுப்பிவிடும். சூரிய சக்தி மூலமாக மின்சாரம் தயாரித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்தத் தொட்டியை உருவாக்கியுள்ளேன். இரவானதும் தானாகவே தெருவிளக்கு போல் எரியும். சி.சி.டிவி கேமராவும் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது’’ என்று ஆச்சர்யப்படுத்தும் பிரியங்காவின் கண்டுபிடிப்பை, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி என முக்கியத் தலைவர்களும், பல பெரிய நிறுவனங்களின் இயக்குநர்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.
‘‘ `கிளீன் இந்தியாவுக்கு உனது கண்டுபிடிப்பு துணையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஐ வில் திங்க் அபௌட் திஸ்!’ என்று பிரதமர் மோடி சொன்னது பெரிய ஊக்கம் எனக்கு. யூஸர் ஃப்ரெண்ட்லியாகவும், அடித்தட்டு மக்களுக்கு பயன்படும் வகையிலுமான இன்னும் பல கண்டுபிடிப்புகளைச் செய்ய வேண்டும்!’’
- இளமையின் திறமையும் வேகமும் பிரியங்கா கண்களில்!

நன்றி-விகடன்

Friday, April 3, 2015

தேங்காயில் இருக்கு அழகும் ஆரோக்கியமும் !

‘பூலோகக் கற்பக விருட்சம்’ தென்னை மரத்துக்கு இன்னொரு பெயர்... தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மகத்துவமானது. தேங்காய் என்றால் சமையலுக்குத் தேங்காய்ப்பூ, தலைக்குத் தேய்க்க, தேங்காய் எண்ணெய் என இரண்டே உபயோகங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், தென்னையின் ஒவ்வொரு பகுதியும் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பயன்படக்கூடியது.
தென்னம் பூ (பூம்பாலை)
தென்னை மரத்தின் பூ, சாப்பிடத்  துவர்ப்பாக இருக்கும். அதிக ரத்தப்போக்கு இருக்கும் பெண்கள், காலையில் வெறும் வயிற்றில் தென்னம் பூவைச் சாப்பிட்டு, உடனே பால் குடித்துவிட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து, காலை உணவைச் சாப்பிடலாம்.  மாதவிலக்கு ஆகும் சமயத்தில், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். மேலும், கர்ப்பப்பை பிரச்னைகளைச் சரிப்படுத்தும்.


வெயில் காலத்தில் ஏற்படும் கடுப்புக் கழிச்சல் எனப்படும் வயிற்று வலி. இதனால், சிலருக்கு மலம் கழிக்கும்போது, ரத்தம்கூட வரலாம். இதற்குத் தீர்வாக, தென்னம் பூச்சாறு, தயிர் - தலா 100 மி.லி, அரை எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து குடித்தால், வயிற்று வலி குறைந்து, மலம் கழிப்பது சுலபமாகும். ரத்தம் வெளியேறுவதும் நிற்கும். 

தென்னம் பூ, களர்ச்சிக்காய், நெருஞ்சி முள் ஆகியவற்றை 20 கிராம் அளவுக்குச் சம அளவில் எடுத்து, 100 மி.லி ஆட்டுப் பாலில் வேகவைத்து, உலர்த்திப் பொடியாக்கி, 48 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டுவர, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
குறும்பை
முதிராமல் உதிரும் தேங்காய்க்குக்  குறும்பை என்று பெயர். வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல்,  தீப்புண்ணுக்கு, குறும்பை நல்ல மருந்து. விஷம் குடித்ததால்  குடல் மற்றும் வயிற்றுப் பகுதியில்  ரணமாகியிருப்பவர்கள், அதிக மருந்து உட்கொண்டு வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள்,  அதிக மது குடித்து குடல் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது குறும்பையைத்தான்.

குறும்பையைச் சின்ன சின்னதாக நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, அது கால் லிட்டர் தண்ணீராகச் சுண்டிய பின், வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை குடிக்க வேண்டும்.
குருத்து
இளநீரை வெட்டும் போது வெள்ளைப் பகுதியாக சிறிது தடிமனாக இருப்பதுதான் குருத்து. இளம் தென்னங் குருத்தில் அதிகப் பலன்கள் உள்ளன. இது துவர்ப்புச் சுவையைத் தரும். வெள்ளைப் பகுதியை (குருத்து) நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, கொதிக்கவிட்டு,  கால் லிட்டர் தண்ணீராக மாறிய பின் குடிக்கலாம். வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை குடித்துவர, மூலம், ரத்த மூலம் போன்ற பிரச்னைகள் நீங்கும்.
இளநீர்
இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்டும் ரத்தத்தில் உள்ள எலக்ட்ரோலைட்டும் ஒரே அளவு என்பதால், அவசர காலத்தில் குளுக்கோஸுக்குப் பதிலாக, இளநீரையே சிலசமயம் நேரடியாக  ரத்த நாளத்தில் ஏற்றுவார்கள். அவ்வளவு மருத்துவப் பயன்கொண்டது. இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கவே கூடாது. அப்படிக் குடித்தால், இரண்டு நாட்கள் வரை வயிறு உப்பசமாக, மந்தமாக இருக்கும். காலை உணவு அல்லது மதிய உணவு முடிந்து, இரண்டு மணி நேரம் கழித்த பிறகே, குடிக்க வேண்டும்.
முற்றாத இளநீரைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். நீர்க்கடுப்புப் பிரச்னை இருந்தால், வெட்டிய இளநீரில் இரண்டு கிராம் சீரகத்தைப் போட்டு, ஒரு மணி நேரம் கழித்து சீரகம் கலந்த இளநீரைக் குடிக்கலாம்.
சீரகம், சிறுபயிறு தலா இரண்டு கிராம் எடுத்து, இளநீரில் ஆறு மணி நேரம் ஊறவைத்துக் குடிக்க வேண்டும். ஊறிய சீரகம் மற்றும் சிறுபயிறை நன்கு மென்று சாப்பிடலாம். தீவிரமான நீர்க்கடுப்பு, நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல், சிறுநீர் கழிக்காமல் இருத்தல், சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்னைகள் குணமாகும்.
தேங்காய்ப் பால்
வாய்ப் புண், வயிற்றுப் புண் குணமாக, அரை மூடி தேங்காயிலிருந்து எடுத்த பாலில், சோம்பு கால் ஸ்பூன் கலந்து, குடிக்க வேண்டும்.  வண்டு, பூரான், அட்டைப் பூச்சிக் கடிக்கு வலியைப் போக்க, தேங்காய்ப் பாலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம். பூச்சி கடித்த இடங்கள், ஜலதோஷத்தினால் மூக்கில் ஏற்படும் புண்களுக்கு தேங்காய்ப் பாலில் நனைத்த பஞ்சை ஒற்றி எடுக்க ரணம் குணமாகும். அட்டைப் பூச்சிக்கடியின் மேல் தேங்காய்ப் பாலுடன், சுண்ணாம்பை சேர்த்து வைக்கலாம்.
தேங்காய்
தேங்காய்த் துருவல் 1/2 மூடி, பனங்கல்கண்டு 2 ஸ்பூன், 3 துளி நெய் கலந்து வாணலியில் வறுக்க, பாகு சேர்த்த பர்பி போல மாறும். அதை,  மிதமான சூட்டில் குழந்தைகளுக்குக் கொடுக்க, சளி, இருமல் நீங்கிவிடும். மலம் மூலமாகச் சளி வெளியேறும். இதைச் சாப்பிட்ட பின், தண்ணீர் குடிக்கக் கூடாது. பெரியவர்கள், இதோடு சிறிது சுக்குப் பொடி சேர்த்துச் சாப்பிட்டால், சளி, இருமல் தொல்லை நீங்கும்.
தேங்காய் அழகுப் பலன்கள்
தாவர எண்ணெய்களில் தேங்காயில்தான் கிளிசரின் அளவு (13.5) அதிகம். கொப்பரையிலிருந்தும் தேங்காய்ப் பாலிலிருந்தும் என இருமுறைகளில் தேங்காய் எண்ணெய் எடுக்கலாம். தேங்காய் பாலிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது.
தேங்காய்த் துருவலை அடுப்பில்வைத்து வதக்கினால், எண்ணெய் போல மிதக்கும், அவற்றை அப்படியே எடுத்து, மெல்லிய வெள்ளைத் துணியில் வைத்து, அம்மைத் தழும்புகள் இருக்கும் இடத்தில் தொடர்ந்து ஒற்றி எடுக்க, அம்மைத் தழும்புகள், கரும்புள்ளிகள் மறையும்.
ஒரு முழுத் தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட பாலை, அடுப்பில் வைத்துக் காய்ச்ச, அது எண்ணெயாக மாறும். அதைக் கரும்புள்ளிகள், அம்மைத் தழும்புகள், தீப்புண், வெட்டுக் காயங்கள், சொறி, சிரங்கு ஆகியவற்றில் மேல் பூசிவர, காயங்கள் தழும்புகள் மறைந்து அழகான சருமம் கிடைக்கும். பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் படர்தாமரைக்குக்கூட, இந்த எண்ணெயைப் பூசலாம். 
தலையிலும் சருமத்திலும் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு, செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயுடன் ஐந்து வெப்பாலை இலைகளைப் போட்டு மூன்று நாட்கள் வெயிலில்வைத்து, தலையிலும், சருமத்திலும் தடவினால், பொடுகு குணமாகும். உடல் முழுவதும் மசாஜ் செய்ய குழந்தைகளுக்குச் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணையே சிறந்தது.
சிரட்டை (தேங்காய் ஓடு) மூலமாகத் தயாரிக்கும் கான்சன்ட்ரேடட் எண்ணெயை, சித்த மருந்துக் கடைகளில் வாங்கி, அனைத்து சருமப் பிரச்னைகளுக்கும் தடவலாம். 
தேங்காய், இளநீர், தென்னம் பூ போன்ற தென்னை மரங்களின் மூலம் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ‘நாரிகேளாஞ்சனம்’ என்ற மையை, குறைந்த அளவில் எடுத்து, கண் மையாகப் பூசிவரலாம். இதனால், கண் வலி, கண் புரை, கண் தொற்று, கண் நோய்கள், பார்வைத் திறன் குறைதல் போன்றவை வராது. மாதவிலக்கு சமயங்களிலும், கருவுற்றபோதும், எண்ணெய் குளியல் எடுத்த அன்றும் இந்த மையைப் பூசக் கூடாது.
இனி தேங்காயை பயன்படுத்தும்போது, அதன் இத்தனை பலன்களும்  நினைவுக்கு வரும்தானே?