Friday, June 5, 2015

ஆர்கானிக் அழகுப்பொருட்கள்

ஆர்கானிக் அழகு ஷாப்பிங்
ர்கானிக் பொருட்களின் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகுப்  பொருட்களும், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு சந்தையில் சக்கைப்போடு போடுகிறது. பக்கவிளைவுகள் அற்ற, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய  இந்த ஆர்கானிக் அழகுப் பொருட்கள் உங்களை மேலும் அழகாக்கட்டும்.
ஹேர் ஆயில்: 200 மி.லி விலை ரூ350/-
நெல்லிக்காய் மற்றும் வல்லாரை இலைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள ஹேர் ஆயில். அடிக்கடி முடி கொட்டும் பிரச்னை இருப்பவர்கள், இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். தலையில் நன்றாகத் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து, இளஞ்சூடான நீரில் தலைக்குக் குளிப்பது நல்லது.
ரூம் ஸ்ப்ரே:300 மி.லி - விலை ரூ160/-
எலுமிச்சையும் சில ஆயுர்வேத மூலிகை எண்ணெயும் கலந்த ஸ்ப்ரே இது. இந்த ஸ்ப்ரே அடித்தால், நல்ல நறுமணம் கிடைப்பதுடன், அறையில் இருக்கும் பாக்டீரியா நுண்
கிருமிகளும் அழியும்.
வெட்டிவேர் ஸ்க்ரப்: விலை - ரூ35/-
உடலைத் தேய்த்துக் குளிக்க பிளாஸ்டிக் நார்களைப் பயன்படுத்துவதைவிட, வெட்டிவேரில் செய்யப்பட்ட இந்த ஸ்க்ரப் உடலில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, புத்துணர்வு தரும்.
ஃபேஸ் வாஷ் 120 மி.லி - விலை ரூ295/-
வேம்பு, மஞ்சள் கலந்த ஃபேஸ்வாஷ் ஜெல் இது. அனைவரும் பயன்படுத்தலாம். குளிக்கச் செல்வதற்கு முன்பு, சிறிதளவு ஜெல்லை எடுத்து, முகத்தில் தடவி, இரண்டு நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு, தூய நீரால் கழுவி, சுத்தமான துணியால் முகத்தை  மென்மையாக ஒத்திஎடுக்கவும்.  வறண்ட சருமமா, எண்ணெய் சருமமா  என உங்களது சரும வகையைத் தெரிந்து கொண்டு, மருத்துவரின் ஆலோசனை  பெற்று, இந்த ஜெல்லைப் பயன்படுத்தலாம்.
மவுத் ஃப்ரெஷ்னர்: விலை - ரூ100/-
நெல்லிக்காய், சீரகத்தை நன்றாகக் காயவைத்துப் பொடித்துச் செய்யப்பட்ட மவுத் ஃப்ரெஷ்னர் இது. உணவு உண்டதும், சிறிதளவு வாயில் போட்டு மென்றால், வாய், புத்துணர்ச்சியாக இருக்கும்.  உடலுக்கும் நல்லது.
லிப் பாம்: விலை - ரூ195/-
நெய், வெண்ணெய், பாதாம் எண்ணெய், அப்ரிகாட் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது இந்த லிப் பாம். உதடு வெடிப்பால் அவதிப்படுபவர்கள், உதடு வறட்சியால் பாதிக்கப்படுவர்கள் இந்த லிப் பாம் பயன்படுத்தலாம்.  நல்ல தீர்வைத் தரும்.
ஆன்டிஏஜிங் பவுடர்: விலை - ரூ150/-
துளசி இலையால் தயாரிக்கப்பட்ட இந்த பவுடரைத் தூய நீரில் கலந்து பேஸ்ட்டாக்கவும். இதனை, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். இளம் வயதிலேயே தோல் சுருங்கி, முதிய தோற்றம் அடைந்தவர்களுக்கு இந்த பவுடர் நல்ல பலனைத் தரும். 
முல்தானிமட்டி சோப்: விலை - ரூ60/-
வெறும் முல்தானிமட்டியைக் கொண்டு செய்யப்பட்டது.  முல்தானிமட்டி தோலில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, பொலிவாக்கும். 
ஃபேஸ் பேக் : விலை - ரூ35/-
வெட்டிவேர், கஸ்துரி மஞ்சள், ஆரஞ்சு எண்ணெய் கலந்து பொடித்த பவுடர் இது. தயிர் அல்லது பன்னீரில் இந்த பவுடரைக் கலந்து, முகத்தில் பேக் போட வேண்டும். நன்றாகக் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். முகம் மலர்ச்சி பெறும். அழகு கூடும்.
வேப்பமர சீப்பு விலை - ரூ160/-
வேப்பமரப் பட்டைகள் மூலம் செய்யப்பட்ட சீப்பு இது. இந்த சீப்பு பயன்படுத்துவதன் மூலம், முடியில் பூஞ்சைத் தொற்று, பேன், பொடுகு  வருவதற்கான வாய்ப்பு குறையும்.
ஆயுர்வேதிக் காஜல்: விலை - ரூ350/-
நெய், ஆமணக்கு எண்ணெய், பாதாம் எண்ணெய், தேன் ஆகியவை கலந்த கண் மை இது. கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
குளியல் எண்ணெய் விலை - ரூ85/-
கருந்துளசி, எலுமிச்சை, பெருஞ்சீரகம், ஆமணக்கு போன்ற எண்ணெய்கள் கலந்த நறுமண எண்ணெய் இது.  குளிக்கும்போது, ஒரு வாளியில்  தண்ணீர் நிரப்பி இரண்டு மூன்று சொட்டு இந்த எண்ணெயைவிட்டு   இரண்டு நிமிடங்கள் கழித்து குளிக்கவும். உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழியும்.   டியோடிரன்ட், சென்ட் போடத் தேவையே இல்லாத அளவுக்கு உடலில் நறுமணம் வீசும். 
குர்குமா  சோப்: விலை - ரூ100/-
மஞ்சள், வெட்டிவேர், ஆரஞ்சு இவற்றால் தயாரிக்கப்பட்டது. உடலுக்கு நல்ல நறுமணம் தருவதுடன், சரும ஆரோக்கியத்துக்கும் நல்லது.

Friday, May 15, 2015

ஒரு டீ சொல்லேன்...



டீ குடிக்கலாம் என்று ஹோட்டல் சென்றால், “டீயா காபியா’’ என்று கேட்ட காலம் போய், “கிரீன் டீயா, வொயிட் டீயா” எனக் கேட்டு, கலர் கலராய் டீ விற்கத் தொடங்கிவிட்டார்கள். நாம் வழக்கமாகச் சாப்பிடும் டீ, ‘டஸ்ட் டீ’ வகையில் வரும். டீ வகைகளில் உடலுக்கு எந்த நலனையும் தராத டீ இது. டீயில் என்னென்ன வகைகள்கள் உள்ளன? எந்த டீயை நம்பிச் சாப்பிடலாம்?
வொயிட் டீ
இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். தேயிலைச் செடியின் இளந்தளிர்களைப் பறித்துத் தயாரிக்கப்படுவதால், இந்த டீ புதுமையான சுவையுடன் இருக்கும். லேசான இனிப்புச் சுவையுடன் இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இதில், பாலிபினால்ஸ் என்கிற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்து இருப்பதால், புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திறன் கிடைக்கும். இதில், ஃப்ளோரைடு அதிகம் இருப்பதால், பற்சிதைவு மற்றும் பற்குழி போன்ற பிரச்னைகள் வராமல் காக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, கிருமித் தொற்றுப் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.
கிரீன் டீ
இதில் அதிக அளவு பாலிபினால்ஸ் இருக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சில புற்றுநோய்கள் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
ஓலாங் டீ
பழங்கள், மல்லிகை போன்ற பல நறுமணங்களில் கிடைக்கிறது. வைட்டமின்கள், தாமிரம், செலினியம், பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்தது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும். எலும்புகள் உறுதி அடையும். அலர்ஜி, பற்கள் தொடர்பான பிரச்னைகள் வராது. புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கும். சர்க்கரை நோயாளிகள் இந்த டீயைக் குடிக்கலாம்.
ஐஸ் டீ
பிளாக், ஓலாங், வொயிட், கிரீன் போன்ற டீ வகைகளை, ஐஸ் டீயாகவும் தயாரிக்கலாம். டீயைத் தயாரித்துவிட்டு, ஃபிரிட்ஜில் வைத்துவிடவும். இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, மூன்று துளசி இலைகள், தர்பூசணி, திராட்சை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சுப் பழத்துண்டுகள் - சிறிதளவு, மூன்று ஐஸ் கட்டிகளை, ஃபிரிட்ஜில் வைத்த டீயுடன் கலந்தால், மணமும் சுவையும் மிக்க ஐஸ் டீ தயார். வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்து உள்ளதால், ஒரு நாளுக்குத் தேவையானப் புத்துணர்வு ஒரு கப் டீயில் கிடைக்கும்.
மூலிகை டீ
துளசி, புதினா, ரோஸ்மெரி, செம்பருத்தி, ரோஜா இதழ்கள், ஆவாரம் பூ, மல்லிகை, லாவண்டர், ஏலக்காய், லெமன் கிராஸ், இஞ்சி போன்றவற்றைக் கலந்து, மூலிகை டீ தயாரிக்கலாம். குமட்டல், தலைவலி, இருமல், சளி போன்ற தொல்லைகள் தீரும். புத்துணர்வைத் தரும். கிருமிகளால் ஏற்படும் தொற்றுக்கள் அண்டாது. நீண்ட, ஆழமான தூக்கம் கிடைக்கும். வயிறு மற்றும் செரிமான இயக்கங்களுக்கு மிகவும் நல்லது. நல்ல மனநிலையைத் தரும். நரம்பு மண்டல இயக்கத்தைச் சீராக்கும். தலைவலி குணமாகும். உள்ளுறுப்புகளில் இருக்கும் கழிவுகள் வெளியேறும்.
காபி
சிக்கரி என்பது ‘கெஃப்னைன் ஃப்ரி’ மூலிகை.  இது காபியில் சேர்க்கப்படும் மூலப்பொருள். காபி கொட்டையில் க்யூனைன் (Quinine) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், தலைவலியைப் போக்கும். நல்ல மனநிலையைத் தரும். பால் சேர்க்காமல் அளவாகக் குடித்தால், குடலில் வாழும் கெட்ட நுண்ணுயிரிகள் அழியும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். ஈரலைப் பலப்படுத்தும்.
எப்போது காபி குடித்தாலும், சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம். கருப்பட்டி, தேன் சேர்த்த காபியே சிறந்தது. நல்ல புத்துணர்ச்சி உடனடியாகக் கிடைக்கும். அடிக்கடி குடிக்காமல், ஒருநாளைக்கு ஒருமுறை எனக் குடிப்பது ஆரோக்கியமான பழக்கம்.
பிரத்யேக சுவையுடன் காபி கடைகளில் கிடைக்கக்கூடிய காபி வகைகளை அளவாக எப்போதேனும் குடிக்கலாமே தவிர, தினமும் குடிக்கக் கூடாது. வெவ்வேறு சுவைகளிலும் தயாரிப்புகளிலும் கிடைக்கும், காப்பசினோ, எஸ்பிரஸ்ஸோ போன்ற காபிகள், சுவையை அள்ளித்தந்தாலும் நல்ல பலன்கள் அதில் இல்லை. 
ஶ்ரீமதி வெங்கட்ராமன்கிளினிகல் நியூட்ரிஷியன்

Friday, May 1, 2015

நீரின்றி அமையாது உடல்...

நீரின்றி அமையாது உடல்...
 ராஜ்குமார்பொது மருத்துவர்
ணவு, உடை, உறைவிடம் இல்லாவிட்டாலும் உயிர் வாழ முடியும். ஆனால், நீர் இல்லாமல் ஒரு சில நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. ஒருநாள் தண்ணீர் குடிக்காவிட்டால்கூட, உடல் சோர்ந்துபோகும். ஏனெனில், நமது உடல் 60 சதவிகிதம் திரவத்தால் ஆனது. உடல் முழுவதும் இருக்கும், உட்புற மற்றும் வெளிப்புற செல்கள் திரவத்தால்  சூழப்பட்டிருக்கும். இந்தத் திரவம், வற்றாமல் எப்போதும் ஈரத்தன்மையுடன் இருக்க தண்ணீர் அவசியம்.
செல்களின் கவசம்: தண்ணீரின் அளவு உடலில் குறைந்தால், செல்களில் உள்ள ஈரப்பதத்தை உடல் எடுத்துக்கொள்ளும். பிறகு, நீர் பற்றாக்குறையால் சரும வறட்சி, உள்ளுறுப்புகள் பாதிப்பு போன்ற பிரச்னைகள் உண்டாகும். நாம் சாப்பிடும் உணவில் இருந்து, ஊட்டச்சத்துக்களை உடலில் உள்ள செல்களுக்குத் தந்து, அதன் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தத் தண்ணீர் உதவுகிறது. 
  
சிறந்த நச்சு நீக்கி: வியர்வை, மலம், சிறுநீர் வழியாக உடல் சுத்தம் செய்யப்படுகிறது. இதற்குத் தண்ணீர் மிகவும் அவசியம். சாப்பிட்ட உணவைச் செரித்து, ஊட்டச்சத்துக்களைக் கிரகித்து, கழிவுகளை வெளியேற்றும் பணியை கல்லீரல், சிறுநீரகம் செய்கின்றன. உணவை நகர்த்திச் செல்லவும், உணவை செரிக்கவும் வைக்கும் செயல்முறைக்குத் தண்ணீர் அவசியம். போதுமான அளவு நீர் அருந்தாவிடில், மலச்சிக்கல், வாயுத் தொல்லை, நீர்க்கடுப்பு, அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்னைகள் உண்டாகலாம்.
சமநிலைக்கு: மாறுகின்ற வானிலைக்கு ஏற்ப, உடலின் வெப்பம் மாறுபடும். உடலின் அதிகப்படியான வெப்பத்தை வியர்வை மூலம் உடல் தணித்து, குளிர்ச்சித் தன்மையை தக்க வைத்துக்கொள்கிறது. அதிகப்படியான வியர்வை வெளியேறும்போது நீர் வறட்சி (Dehydration) ஏற்படும். இதனால், உடலின் ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்படும். எனவே, உடலின் தண்ணீரைக் கவனிப்பது அவசியம்.
சரும பொலிவுக்கு: சருமம் சுவாசிக்கத் தண்ணீர் அவசியம்.  ஏ.சி அறையிலேயே இருப்பவர்களுக்குத் தாகம் எடுக்காததால், சிலர் நீர் அருந்தாமலே இருப்பார்கள். இதனால், சருமம் களையிழந்து, உதடு வறண்டு போகும். இது, உடலில் போதுமான அளவு நீர் இல்லை என்பதற்கான அறிகுறி. 
சிறுநீரகத்தின் காவலன்: உடலில் போதுமான  தண்ணீர் இல்லாவிடில், சிறுநீரகங்கள் பெரிதும் பாதிக்கப்படும். உடலின் நச்சுக்களை நீக்க வழியில்லாதபோது, சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். ரத்தத்தைச் சீராக்கி, அனைத்து உறுப்புகளுக்கும் செலுத்தத் தண்ணீர் அவசியம். 
 
சுகாதாரமான தண்ணீர்: உணவகங்கள், வெளியிடங்களில் வாங்கிப் பருகும் நீர் சுத்தமானதாக இல்லாமல் போனால், கிருமிகள் வழியாக டைபாய்டு, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற பிரச்னைகள் வரலாம்.
வாட்டர் பாட்டில் ப்ளீஸ்
கையில் எப்போதும் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்ளலாம். இது பிளாஸ்டிக் பாட்டிலாக இல்லாமல் இருப்பது நலம். சிறுநீர் மஞ்சளாகவோ, அடர் மஞ்சளாகவோ இருந்தால், உடலில் தண்ணீர் போதவில்லை என அர்த்தம். காலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீரோடு அந்த நாளைத் தொடங்குங்கள். தண்ணீரை ஒரே நேரத்தில் மடமடவென்று குடிக்காமல், கொஞ்சம், கொஞ்சமாகக் குடிப்பதே சரி.
எது நல்ல தண்ணீர்?
பாட்டில் தண்ணீர் மற்றும் கேன் தண்ணீர் ஆகியவற்றில் சத்துக்கள் நீக்கப்பட்டு, செயற்கைச் சத்துக்கள் கலந்து விற்கப்படுவதால், எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என உறுதியாகச் சொல்ல முடியாது. நம் நிலத்தடி நீரே குடிக்க உகந்தது. நிலத்தடி நீரை ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து, ஆறவைத்து வடிகட்டி பிறகு, குடிப்பது பாதுகாப்பானது.
தண்ணீர் தேவை?
ஒரு நாளைக்கு 8-10 டம்ளர்கள் நீர் அவசியம். குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீராவது அவசியம் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வோர், உடல் உழைப்பு அதிகம் உள்ள வேலை செய்பவர்கள், வெயிலில் அலைபவர்கள் இன்னும் அதிக அளவில் நீர் அருந்த வேண்டும். தண்ணீராக மட்டுமின்றி, நீர் நிறைந்த காய்கறி, பழங்களின் மூலமாகவும் நீரின் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.
நன்றி
டாக்டர் விகடன்

Friday, April 17, 2015

வயிறு - என்ன செய்யும்?

ற்களால்கூட கூழாக்க முடியாத உணவை, இரைப்பை அரைத்துவிடும். இரைப்பையில் உணவு செரிக்க, மூன்று மணி நேரம் பிடிக்கும். சாப்பிடும்போது, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சுருங்கி விரியும் இரைப்பை, சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை சுருக்கி விரியும். இதனால், வயிற்றில் வலி, பசி மயக்கம், சோர்வு ஏற்படும். உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிக்கப்படும். நேரத்துக்குச் சாப்பிடுவது அவசியம்.
 
 பசிக்காமல்போனால், உண்ட உணவு சரியாகச் செரிமானம் ஆகவில்லை என்று அர்த்தம். அதிக உடல் எடை, இரவு உணவைத் தாமதமாகச் சாப்பிடுவது, செரிமானம் இன்மைக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. உணவுத் துணுக்குகள் உமிழ்நீருடன் சேர்ந்து, நன்கு ஜீரணமாக உதவுவதால், உணவை அப்படியே விழுங்காமல், நன்றாக மென்று சாப்பிட வேண்டும். கடின உணவைத் தவிர்த்து, மிருதுவான உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.     
 காரம் சாப்பிட்டால்தான் அல்சர் வரும் என்று, அந்தக் காலத்தில் சொல்லப்பட்டது. ஆனால் இன்றோ, எதற்கெடுத்தாலும் வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வதாலும் அல்சர் வருகிறது. மருத்துவரின் பரிந்துரை இன்றி, வலி மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. சிவப்பு மிளகாய் பயன்படுத்துவதை, முடிந்தவரை தவிர்க்கவும்.
 நார்ச்சத்து நிறைந்த கொய்யா, பப்பாளி, வாழை போன்ற பழங்களைத் தினமும் சாப்பிடுவதும், கீரை சேர்த்துக்கொள்வதும், போதுமான அளவு நீர் அருந்துவதும், மலச்சிக்கலில் இருந்து தப்பிக்க உதவும்.
 செரிமானம் இன்மை, பசி இன்மை, தலைவலி, அஜீரணக் கோளாறு போன்ற காரணங்களால் வயிற்று உப்புசம் ஏற்படலாம். மேலும், ஹைப்போதைராய்டு, அதிக அளவு கொழுப்பு, அளவுக்கு அதிகமான சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலும் வயிறு வீங்கலாம். வயிற்றில் இருப்பது காற்றா, நீரா என்பதை, அல்ட்ராசவுண்டு ஸ்கேன் செய்துபார்த்து, அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.
 அதிக அளவு கொழுப்பு, வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும்போது, தொப்பை விழுகிறது. இதனால், உடல்பருமன் அதிகரித்து, சர்க்கரை நோய், இதயநோய்க்கு வழிவகுக்கும். முறையான பயிற்சி, நார்ச்சத்து, அதிகம் கொழுப்பு இல்லாத உணவுகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், தொப்பை வருவதைத் தவிர்க்கலாம்.
 பெண்களுக்கு, குழந்தைப் பிறப்புக்குப் பிறகு, வயிற்றில் வரிகள் (Stretch marks) ஏற்படும். வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வந்ததும், தசைகள் சுருங்குவதால் இந்த வரிகள் ஏற்படுகின்றன.  வயிற்றுத் தசைகளை இறுக்கும் பயிற்சிகள், நார்ச்சத்து உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம், இந்த வரிகளைப் போக்கலாம்.
 உணவு அலர்ஜி ஏற்பட்டாலும் வாந்தி வரலாம். வாந்தி வருவதைத் தடுக்கும் மருந்துகள் இருக்கின்றன. வாந்தி வரும்போது, அதைத் தடுப்பதைவிட, எடுத்துவிடுவதே நல்லது. அதிக அமிலங்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
 பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுதான் வயிற்றுப்போக்கு. இதனால், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைக் கிரகிக்க முடியாமல் போகிறது. உடலுக்குத் தேவையான ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது. வயிற்றுப்போக்குக்கான காரணத்தை சரிசெய்வதுடன், சத்தான உணவு, சுத்தமான தண்ணீர், திரவ உணவுகள் எடுத்துக்கொள்வதன்
மூலம், இழந்த சத்தை மீட்கலாம்.
 வயிற்றில் அதிகக் காற்று சேருவதற்கு, வாய் வழியாகக் காற்றை விழுங்குவதுதான் காரணம். நிதானமாகச் சாப்பிடுவது, மெதுவாகத் தண்ணீர் குடிப்பது, மூன்று வேளைக்குப் பதில், ஐந்து வேளையாக உணவைப் பிரித்து உண்பது போன்ற பழக்கங்களால் இதனைத் தவிர்க்கலாம். பாட்டில் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். சாப்பிட்டதும் அரை கிலோமீட்டர் மெதுவாக நடப்பது நல்லது.

நன்றி- டாக்டர் விகடன்.

Friday, April 10, 2015

சூப்பர் ஸ்டாக்கர் 3சி’ ப்ரியங்காவின் கண்டுபிடிப்பு....

க்ளீன் இந்தியா’ திட்டத்துக்காக பள்ளி மாணவர்கள் பலரும் தெருக்களில் இறங்கி சுத்தம் செய்ததையே மகிழ்ச்சியோடு பார்த்த நமக்கு, பெருமகிழ்ச்சி தருகிறார்... பலகட்ட பாய்ச்சலாக, நவீன குப்பைத் தொட்டியை உருவாக்கியிருக்கும் பதினோராம் வகுப்பு மாணவி, பிரியங்கா மதிஷரா. இவர் சென்னை, சர்ச் பார்க் பள்ளி மாணவி.
‘‘வீட்டின் எதிரில், வீதியில் பேருக்கு ஒரு குப்பைத் தொட்டி இருக்கும். அது எப்போதும் நிரம்பி வழியும். குப்பை அள்ள வருகிறவர்களைப் பார்க்கவும் பாவமாக இருக்கும். எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், கழிவுகளைக் கைகளால் அவர்கள் சுத்தம் செய்வது, கொடுமை. மனதை அரித்துக்கொண்டிருந்த இந்தக் காட்சிகள்தான், நவீன குப்பைத் தொட்டியைக் கண்டுபிடிக்கத் தூண்டியது.  
 
இதன் பெயர் ‘சூப்பர் ஸ்டாக்கர் 3சி’. இப்போது தெருக்களில் நாறிக்கொண்டும், நிரம்பி வழிந்துகொண்டும் அருவருக்க வைக்கும் குப்பைத் தொட்டிகள் போல இது இருக்காது. காரணம், இதில் குப்பையைக் கொட்டியதும் அவற்றை க்ரஷ் செய்து கம்ப்ரஸ் செய்துவிடும். இதனால் நிறைய இடம் கிடைக்கும். அப்படியே குப்பைத் தொட்டி நிரம்பிவிட்டால், உடனடியாக மாநகராட்சிக்கு எஸ்.எம்.எஸ்.  அனுப்பிவிடும். சூரிய சக்தி மூலமாக மின்சாரம் தயாரித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்தத் தொட்டியை உருவாக்கியுள்ளேன். இரவானதும் தானாகவே தெருவிளக்கு போல் எரியும். சி.சி.டிவி கேமராவும் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது’’ என்று ஆச்சர்யப்படுத்தும் பிரியங்காவின் கண்டுபிடிப்பை, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி என முக்கியத் தலைவர்களும், பல பெரிய நிறுவனங்களின் இயக்குநர்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.
‘‘ `கிளீன் இந்தியாவுக்கு உனது கண்டுபிடிப்பு துணையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஐ வில் திங்க் அபௌட் திஸ்!’ என்று பிரதமர் மோடி சொன்னது பெரிய ஊக்கம் எனக்கு. யூஸர் ஃப்ரெண்ட்லியாகவும், அடித்தட்டு மக்களுக்கு பயன்படும் வகையிலுமான இன்னும் பல கண்டுபிடிப்புகளைச் செய்ய வேண்டும்!’’
- இளமையின் திறமையும் வேகமும் பிரியங்கா கண்களில்!

நன்றி-விகடன்